வேப்பிலை

உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி வேப்பிலையில் உள்ளது. கற்பமூலிகை என்றழைக்கப்படும் வேப்பிலைக்கு நரை, மூப்பு என்ற மூன்றையும் அணுக விடாமல் தடுக்கும் குணம் உண்டு. இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப்படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்தி ருப்போரும் இதை உட்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். 2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக்குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், வீக்க உருக்கி, குடல் புண்ண கற்றி, மலேரியா  போக்கி, பூஞ்சை நோய் நீக்கி, பாக்டீரியா அகற்றி, வைரஸ் அகற்றி, ஆண்டி ஆக்சிடென்ட், புற்றுநோய் தடுப்பு, வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக்கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டுநோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக்கூடிய சரும நோய்கள். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை :

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக்காய்ச்சி , அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது. வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்:

அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம். சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வரலாம். சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும். வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள் , வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத் தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்:

விவசாயத்துறையில் பூச்சிக்கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப்பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப் படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன் படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு. வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப் படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும். பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம்பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.

No comments:

Post a Comment